போபால்: முத்தம் தந்து கொரோனாவை குணமாக்குவதாக கூறிய முத்த சாமியார், கொரோனா தாக்கி பலியான சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. அவரிடம் முத்தம் பெற்ற 19 பேருக்கு கொரோனாவால் பாதித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 430 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், ரத்லம் மாவட்டத்தின் நயபுரா பகுதியில், ‘அஸ்லம் பாபா’ என்ற சாமியார், முத்தம் தந்து கொரோனாவை குணப்படுவதாக கூறியுள்ளார். தன்னிடம் வருபவர்களுக்கு முத்த ஆசீர்வாதம் வழங்குவதை வழக்கமாக கொண்ட அந்த சாமியார், கைகளில் முத்தம் பெற்றால் கொரோனா அண்டாது என கூறி உள்ளார்.
அதை நம்பி பலர் அவரிடம் முத்தம் பெற்றுள்ளனர். இதற்கிடையே, கடந்த 4ம் தேதி சாமியாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இந்த தகவல் கேட்டு அவரிடம் முத்த ஆசீர்வாதம் பெற்றவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். சாமியாரிடம் முத்தம் பெற்ற 19 பேரை பரிசோதித்ததில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 29 பேர் தனிமை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் மபியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகமே கொரோனா மருந்து கண்டுபிடிக்க இரவு பகலாக கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், முத்ததால் குணப்படுத்த முடியுமென்ற இதுபோன்ற பொய்களையும் மக்கள் நம்பத்தான் செய்கிறார்கள்.