சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்தது நீட்டிக்கப்பட்டு, தற்போது நாடு முழுவதும் வருகிற ஜூன் 30ம் தேதி வரை முடக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. எனினும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பரவலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (15-06-2020) ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நாளை மறுநாள் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் சென்னையில் ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கு நீட்டிப்பு செய்வதற்கு முன் மருந்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.