மும்பை : இந்தியாவில் வர்த்தக தலைநகரான மும்பை கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனாவின் வூகான் நகரத்தை முந்தியுள்ளது. மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று புதிதாக 2,258 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மராட்டியத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,787 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,289 ஆகும். மும்பை நகரில் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டு வரும் அதே வேளையில், தொற்றும் வேகம் பிடித்திருக்கிறது.
மும்பையில் 51,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு இதுவரை 1,760 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து தொற்று பரவுவதால் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வூகான் நகரத்தை மும்பை பின்னுக்கு தள்ளியுள்ளது. நேற்று இந்தியா முழுவதும் 8,852 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 241 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 7,719 ஆனது. நாடு முழுவதும் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 2,74,780 ஆகும். இதுவரை 1, 34,166 பேர் குணம் அடைந்துள்ளனர். உலக கொரோனா பாதிப்பு பட்டியலில் தற்போது இந்தியா 6ம் இடத்தில் உள்ள நிலையில், பிரிட்டன், ஸ்பெயினை ஓரிரு நாளில் பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு இந்தியா சென்று விடும் என்று அஞ்சப்படுகிறது.