புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நோய் அச்சுறுத்தலையொட்டி கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் வேலை செய்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப தொடங்கினார்கள். அரசின் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் மூலமாகவும், நடைபயணமாக, வாகனங்கள் மூலமாக என லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு திரும்பி சென்றனர். இதனால் வேலையின்றி வருமானம் இன்றி அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மே மற்றும் ஜூன் மாதத்துக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அல்லது எந்த பொது விநியோக திட்டத்தில் இல்லை என்றாலும் புலம் பெயர் தொழிலாளர்கள் உணவு தானிய பொருட்களை பெறலாம் என்றும் அரசு குறிப்பிட்டு இருந்தது.
குடும்பஅட்டை இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, ஒரு கிலோ கொண்டை கடலை உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். அரசின் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கூறியிருந்தார்.இந்நிலையில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 4.42 லட்சம் டன் உணவு தானியங்களை பெற்றுள்ளன. இதில் 10,131 டன் உணவு தானிய பொருட்கள் சுமார் 20.26 லட்சம் பயனாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.96 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கும் வகையில் 39 ஆயிரம் டன் பருப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 15,413 டன் பருப்பு பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் 631 டன் பருப்பை மட்டுமே விநியோகித்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.