ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் நடக்கும் அகல ரயில் பாதை பணி ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும் என தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், போடியில் இருந்து மதுரை செல்லும் மீட்டர் கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக, கடந்த 2010ல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் தொடங்கப்பட்ட பணி கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடந்தது. அதை தொடர்ந்து உசிலம்பட்டியில் இருந்து போடி வரை அகல ரயில் பாதை பணி நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பணிகள், கடந்த மே 11 முதல் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. ஆண்டிபட்டி அருகே, கணவாய் மலைப்பகுதியில், தண்டவாளங்கள் அமைப்பதற்காக பணிகள் நடந்து வருகின்றன.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘மதுரை-போடி அகல ரயில் பாதை பணியில் பாலம் கட்டுதல், தடுப்பு அமைத்தல், சிக்னல் வயர் அமைத்தல் நடந்து வருகிறது. கணவாய் மலைப்பகுதியில் மலைகளை குடையும் பணி நிறைவு பெற்றுவிட்டது. தற்போது மழை பெய்வதால் கணவாய் மலையில் நீர்சுரந்து கசிவு ஏற்படுகிறது. இந்த தண்ணீரை வெளியேற்ற வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் கணவாய் மலைப்பகுதியில் ரயில் பாதை அனைத்தும் நிறைவடையும்’ என்றனர்.