மும்பை: மும்பையில் நேற்று முன்தினம் மரணமடைந்த பாலிவுட் இசையமைப்பாளர் வாஜித் கானின் தாயாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட்டின் இரட்டை இசையமைப்பாளர்கள் சாஜித்-வாஜித் கான். சகோதரர்களான இவர்கள் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இதில் இளையவரான சாஜித் கான் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்கிடையே, சமீபத்தில் அவரது சிறுநீரகத்தில் மீண்டும் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றும் ஏற்பட்டது. இதனால், உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்ட வாஜித் கான் கடந்த வாரம் மும்பை, செம்பூரில் உள்ள சுரானா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், வாஜித் கானின் தாயார் ரெஜினா கானுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, வாஜித் கான் அனுமதிக்கப்பட்டிருந்த அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அடுத்த சில நாட்களில் ரெஜினா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.