மாமல்லபுரம்: நாடு முழுவதும் 144 தடை உத்தரவு வரும் 31ம் தேதி வரை அமலில் உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதமாக சலூன் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், ஊரக பகுதிகளில் கடந்த 19ம் தேதி சலூன் கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவை பிறப்பித்தது. ஆனால், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கவில்லை. இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் காலை 7 மணிமுதல் மாலை 7 மணிவரை திறக்க அரசு உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து, மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதியில் கடந்த 60 நாட்களாக மூடப்பட்ட சலூன் கடைகள், நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து, வாடிக்கையாளர்கள் வந்து சமூக இடைவெளியை பின்பற்றி முடிவெட்டி சென்றனர். முடி திருத்தும் ஊழியர்கள் அனைவரும், தஙகளது கடைகளில் முக கவசம் அணிந்து, வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்டினர்.மேலும், கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள், முககவசம் அணிந்தும், சானிடைசர் கொண்டு கைகளை கழுவிய பிறகே அனுமதிக்கப்பட்டனர்.