புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவருக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர் அஞ்சலி செலுத்தினார்கள். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984ம் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் 6வது பிரதமராக மிக இளம் வயதில் ராஜிவ் காந்தி, பொறுப்பேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு தமிழகத்தின் பெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தின்போது தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது 29வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி பிரதமர் மோடி, மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என பதிவிட்டு இருந்தார். இதேபோல் தனது தந்தை ராஜிவ் காந்தியின் நினைவு தினத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து ராகுல் தனது டிவிட்டர் பதிவில், “உண்மையான தேசப்பக்தரின் மகன் மற்றும் ஒரு நல்ல தந்தையின் மகன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். பிரதமராக முன்னோக்கான கண்ணோட்டத்துடன் நாட்டை மேம்படுத்த முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அவரது நினைவு நாளில் பாசத்தோடும், நன்றியுடனும் அஞ்சலி செலுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.