சென்னை: சென்னை பாடியை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் ஜெ.பூவேந்தன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ‘கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 200 ஆண்டுகளுக்கும் மேல் மக்கள் பயன்படுத்தி வரும் ஓமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30ஐ பயன்படுத்த ஆயுஷ் பரிந்துரைத்துள்ளது. பக்கவிளைவு எதுவும் இல்லாத இந்த ஓமியோபதி மருந்தை ஆயுஷ் வழிகாட்டுதலின்படி குஜராத் மாநிலத்தில் 75 லட்சம் மக்களுக்கு கொடுத்துள்ளனர். கொரோனா தாக்குதலுக்குள்ளான 2500 பேருக்கும் இந்த மருந்து தரப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த மருந்தை பரிந்துரை செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, கொரோனாவை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிகம் ஆல்பம் 30 ஓமியோபதி மருந்தை மக்களுக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கும் இலவசமாக தருமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பி.வேலுமணி, மலர்விழி, ஆஜராகினர். அப்போது அரசு பிளீடர் ஆஜராகி, ஆயுஷ் வழிகாட்டுதலின்படி இந்த மருந்தை பயன்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். விசாரணையின்போது மனுதாரர் கூறும் மருந்தை பயன்படுத்துவது குறித்து சமூக வலைதளங்களில் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தலாமே என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.