சென்னை: கடந்த 4ம் தேதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேசன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் அல்லது மருத்துவ கல்வி இயக்குநர், கலெக்டர் அனுமதியின்றி கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்வி தகுதியோ, முறையான அங்கீகாரமோ இல்லாமல் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வரும் போலி சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம் கூறிவருகிறார்.
இதனால் பொதுமக்கள் நலனுக்கு ஆபத்து உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, போலி மருத்துவர் திருத்தணிகாசலத்தை கைது செய்து, 4 நாள் போலீஸ் காவலில் விசாரித்தனர். பின்னர் கடந்த சனிக்கிழமை திருத்தணிகாசலத்தை கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்த குருநாதன் வெண்குட்டம் பாதிப்பு தொடர்பாக திருத்தணிகாசலத்திடம் சிகிச்சை எடுத்தார்.
இதற்காக, அவர் திருத்தணிகாசலத்துக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் வெண்குட்டம் சரியாக வில்லை.
அவரிடம் குருநாதன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், திருத்தணிகாசலம் பணத்தை தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்தார். அதே போன்று மதுராந்தகத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு அவரிடம் சிகிச்சை பெற்றார். அவருக்கும் குணமாகவில்லை. பணத்தை திருப்பி கேட்ட நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 2 பேரும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து தனித்தனியாக 2 வழக்குகளில் நேற்று திருத்தணிகாசலத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கிலும் அவரை காவலில் எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் திருத்தணிகாச லம் மீது புகார்கள் குவிந்து வருவதால் ஓரிரு நாளில் குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்படக்கூடும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாமீன் மனு தள்ளுபடி
சித்த வைத்தியர் திருத்தணிகாசலம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். எனவே, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திருத்தணிகாசலம் மனு செய்ய உள்ளார்.