திருவள்ளூர்: தெற்கு ரயில்வேயில் தலைமை டிக்கெட் பரிசோதகராக பணிபுரிபவர் பரந்தாமன் (43). அரக்கோணத்தை சேர்ந்த இவர் சென்னை சென்ட்ரல் - விஜயவாடா வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் பணியாற்றி வந்தார். ஊரடங்கு இருந்தாலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால் தினமும் பணிக்கு வந்து சென்றுக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று திருவள்ளூரில் இருந்து வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதனால் திருவள்ளூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று மாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் ஒன்று ஒடிசா மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
மேலும், 2வது ரயில் நேற்று இரவு 8 மணிக்கு பீகார் புறப்பட இருந்ததால் பரந்தாமன் அங்கு தொடர்ந்து பணியில் இருந்தார். நேற்று மாலை ரயில் நிலையம் அருகே ரயில் பாதையை பரந்தாமன் கடக்க முயன்றார். அப்போது சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் எதிர்பாராத விதமாக பரந்தாமன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பரந்தாமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.