×

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சொந்த ஊருக்கு செல்லும்போது விபத்தில் இறக்கும் குடும்பத்திற்கு என்ன நிவாரணம்? ஐகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை: கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்து, உணவு, உறைவிடம் இல்லாததால் குழந்தைகளுடன் நடைபயணமாக சொந்த ஊர்களை நோக்கி பயணிக்கத் தொடங்கியவர்களை அரசு அதிகாரிகள் புறக்கணித்து விட்டதாக கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம் சொந்த மாநிலங்களுக்கு செல்பவர்களில் வழியில் மரணமடைந்தால் அவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.  கொரோனா ஊரடங்கு காரணமாக, மஹாராஷ்டிரா மாநிலம், சாங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் கிராமத்தில் சிக்கியுள்ள கணேசன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி வக்கீல் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ேஹமலதா அடங்கிய அமர்வு அளித்த உத்தரவு வருமாறு: வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனவா என்பதை அறிந்து கொள்ள இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தையும், தமிழக தலைமைச் செயலாளரையும் எதிர் மனுதாரராகச் சேர்த்து உத்தரவிடப்படுகிறது. வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் பார்க்கும் எவராலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது. ஊரடங்கு அறிவித்த நாள் முதல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே சிக்கித் தவித்து வருகிறார்கள்.வேலை வாய்ப்பை இழந்து, உணவு, உறைவிடம் இல்லாததால் குழந்தைகளுடன் நடைபயணமாக சொந்த ஊர்களை நோக்கி பயணிக்கத் துவங்கியுள்ளனர்.

வழியில் பட்டினியிலும், விபத்துக்களிலும்  உயிரிழந்து வருகிறார்கள். ஆனால், அவர்களை அரசு அதிகாரிகள் புறக்கணித்து விட்டனர்.இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் தர வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்? மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் அவர்களுக்கு என்ன உதவிகள் வழங்கியுள்ளன?  சொந்த ஊர் திரும்பும் வழியில் எத்தனை தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்? அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன? நாடு முழுவதும் எத்தனை தொழிலாளர்கள் பேருந்து மற்றும் ரயில் மூலம் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்?

மீதமுள்ள தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதும் கொரோனா பரவலுக்கு ஒரு காரணமா? வெளி மாநில தொழிலாளர்களுக்கு நிதியுதவியும், வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனா?இந்த கேள்விகளுக்கு மே 22ம் தேதி மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டள்ளது.




Tags : accident ,Corona , Corona, curfew, High Court, the Federal Government, State Government
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...