சென்னை: கொரோனாபரவும் ஆபத்து உள்ளதால் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. அதேநேரம் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யலாம் என்று அனுமதி வழங்கியது. இந்நிலையில் இதை மோசடி நபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர். டாஸ்மாக் பெயரில் ஆன்லைனில் போலியான கணக்கு தொடங்கி மது விற்பனை செய்யவதாக விளம்பரம் செய்து, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்து வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து தமிழக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சார்பில் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் இன்னும் ஆன்லைனில் மது விற்பனை தொடங்கவில்லை. ஆனால் இணையதளங்களில் டாஸ்மாக் பெயரில் சிலர் போலி முகவரி தொடங்கி பொதுமக்களிடம் மது விற்பனை செய்வதாக பணம் பெற்று மோசடி செய்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போலி ஆன்லைன் முகவரியை தடை செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.புகாரின்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் டாஸ்மாக் பெயரில் ஆன்லைனில் போலியாக உருவாக்கப்பட்டிருந்த முகவரிகளை உடனே தடை செய்தனர். மேலும், பணம் மோசடி செய்த நபர்கள் யார், யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.