×

மகனுக்கு கொரோனா தொற்று அதிர்ச்சியில் 90 வயது தந்தை மரணம்: திருநின்றவூரில் பரபரப்பு

சென்னை: ஆவடி அடுத்த திருநின்றவூர், கோமதிபுரம் பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வசித்து வருகிறார். மேலும், இவருடன் அவரது 90 வயது தந்தை, 15 வயது மனநிலை பாதிக்கப்பட்ட மகள் மற்றும் வேலைக்காரி ஒருவரும் வசித்து வருகின்றனர்.  கடந்த 11ம்தேதி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தலைமையாசிரியர் தொற்று நோய் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தகவல் தெரிந்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில்  சேர்க்கவில்லை. எனவே, அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு வீட்டிலேயே தனியறையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு தலைமையாசிரியரின் தந்தை திடீரென்று இறந்தார்.   நேற்று காலை அப்பகுதியில் 50க்கு மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். இதனால், அங்கு பதற்றம், பரபரப்பு ஏற்பட்டது. மேலும்,  பொதுமக்கள் தலைமை ஆசிரியரை மீட்டு மருத்துவமனையில் உடனடியாக சேர்க்க வேண்டுமென வலியுறுத்தினர். தகவலறிந்து,  காலை 11 மணியளவில் மாவட்ட சுகாதாரத்துறை, திருநின்றவூர் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.  ஆவடி தாசில்தார் சங்கலிரதி, திருநின்றவூர் பேரூராட்சி சுகாதார மையத்தின் டாக்டர் கீதா, இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தலைமையாசிரியரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது மகள், வேலைக்காரி இருவரையும் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளனர். மேலும், பேரூராட்சி நிர்வாகம் மூலமாக அப்பகுதியில் கிருமிநாசினி தெளித்தும், பிளீச்சிங் பவுடர் தூவியும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பிறகு, மரணமடைந்த தலைமையாசிரியர் தந்தையின் உடலை தகனம் செய்வதற்கு முன்பாக டாக்டர் குழுவினர் தொற்று உள்ளதா என்பதற்கான மாதிரிகளை எடுத்தனர்.

இதன்பிறகு, போலீசார் மற்றும் அதிகாரிகள் முதியவர் உடலை மீட்டு உறவினர் முன்னிலையில் கிருஷ்ணாபுரத்தில் உள்ள எரிவாயு தகன மேடையில் தகனம் செய்தனர். தனது மகனுக்கு தொற்று இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் முதியவர் மரணமடைந்து இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் திருநின்றவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : coronavirus shock Coroner , Son, Corona, father of 90 years, death, Thiruninvur
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...