×

சிரஞ்சீவி செய்த உதவி சரத்குமார் கண்ணீர்

சமீபத்தில் நேரலை பேட்டி ஒன்றில்  சிரஞ்சீவி பற்றி சரத்குமார், ராதிகா பேசினர். அப்போது சரத்குமார் பேச முடியாமல் கண் கலங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.”சிரஞ்சீவி எனக்கு மிகவும் கடினமான ஒரு காலக்கட்டத்தில் பேருதவி செய்தார். அப்போது நான் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய பிரச்னையில் சிக்கித் தவித்தேன். அப்போது ஒரு தயாரிப்பாளர், ‘சிரஞ்சீவியின் கால்ஷீட் வாங்கிக் கொடுங்கள். அவரை வைத்து படம் தயாரிப்போம். அதில் கிடைக்கும் லாபத்தை உங்களுக்கு தருகிறேன்’ என்று சொன்னார்.

உடனே ஐதரபாத்திலுள்ள ஸ்டுடியோவுக்கு சென்று, ஒரு படத்தின் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த சிரஞ்சீவியிடம், ‘உங்களை தனியாக சந்தித்து பேச வேண்டும்’ என்று சொன்னேன். எனது தயக்கத்தை பார்த்த அவர், உடனே படத்தின் இயக்குனரை அழைத்து, ‘நான் சரத்குமாரிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும். இந்த காட்சியை  நாளை படமாக்கிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் என்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். எனக்காக அவர் படப்பிடிப்பை ரத்து செய்தது ஆச்சரியமாக இருந்தது.

பிறகு வீட்டில் சாப்பிட்டோம். கால்ஷீட் கேட்டேன். தருவதாக சொன்னார்.  ‘உங்கள் சம்பளம் எவ்வளவு?’ என்று கேட்டேன். ‘எனக்கு சம்பளமா? உங்களுக்கு ஏதோ மிகப் பெரிய பொருளாதார பிரச்னை என்று சொல்கிறீர்கள். எனவே, எனக்கு சம்பளம் வேண்டாம். கால்ஷீட் கொடுத்து நடிக்கிறேன். உங்களுடைய எல்லா பிரச்னைகளும் தீரும்’ என்று ஆதரவாக சொன்னார். அதைக் கேட்டவுடன் நான் அழுதுவிட்டேன். அதற்காக இப்போது நான் அவருக்கு நன்றி சொல்கிறேன்” என்று பேசிய சரத்குமார், தொடர்ந்து வார்த்தைகள் வராமல் கண் கலங்கினார்.

Tags : Chiranjeevi ,Sarathkumar , Chiranjeevi, Sarathkumar
× RELATED திருத்தணி அருகே வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல்..!!