புதுடெல்லி: காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புவது உள்ளிட்ட பாகிஸ்தான் மேற்கொள்ளும் அனைத்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே எச்சரித்துள்ளார். இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நேற்று செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: போர் நிறுத்தத்தை மீறும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள், பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும். வடக்கு காஷ்மீரில் அசுதோஷ் சர்மா தலைமையில் நடந்த தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படைவீரர்கள் 5 பேர் தங்கள் உயிரை கொடுத்து தீவிரவாதிகளிடம் இருந்து பொதுமக்கள் உயிரை காப்பாற்றிய சம்பவம் என்னை பெருமையடைய செய்துள்ளது.
தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதை கொள்கையாக கொண்டுள்ள பாகிஸ்தான் தனது நடவடிக்கையை நிறுத்தும் வரை இந்தியா அந்த நாட்டுக்கு பதிலடி கொடுப்பதை தொடரும். பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதில் ஆர்வம் காட்டாத அந்த நாட்டு அரசு இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவதுடன், மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையும் அதிகரிக்கிறது. அதை தீர்க்க பாகிஸ்தான் முன்னுரிமை அளிப்பதில்லை.
பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் சம்பவங்கள் அதிகரித்துவருகிறது. எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள அப்பாவி பொதுமக்களின் உயிரை குறிவைப்பதே அவர்களது நோக்கமாக உள்ளது. கொரோனா தொற்று உலக அளவில் அதிகரிக்கும் நாடாக பாகிஸ்தான் இருந்தாலும் தங்கள் நாட்டு மக்களுக்கு பாகிஸ்தான் நிவாரணம் வழங்கவில்லை. தீவிரவாத நாடு என்ற உலக பட்டியலில் இருந்து தங்களது பெயரை நீக்க முயற்சிக்கும் அதே வேளையில் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதையே தங்களது குறிக்கோளாக பாகிஸ்தான் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.