டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும்பொழுது, காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராகப் போராடி வருவதாகப் பிரகாஷ் ஜவடேகர் விமர்சித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான பணம் செலவிட வேண்டி உள்ளது. இதனால், நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மத்திய அரசு, சமீபத்தில் எம்.பி.க்களின் சம்பளத்தை குறைத்ததோடு, அவர்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியையும் ரத்து செய்து இருக்கிறது.
இந்நிலையில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு 23 ஆயிரம் கோடி ரூபாயும், புல்லட் ரயில் திட்டத்துக்கு ஒரு லட்சத்துப் பத்தாயிரம் கோடி ரூபாயும் மத்திய அரசு வீணாக செலவழிப்பதாக காங்கிரசின் ரன்தீப் சுர்ஜிவாலா குற்றம்சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும்போது, காங்கிரஸ் மத்திய அரசுக்கு எதிராகப் போராடுவதாக சாடினார். காங்கிரசின் இத்தகைய செயல்பாடு ஒருநாள் கேள்விக்குள்ளாகும் என்றும், அதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்றும் ஜவடேகர் தெரிவித்தார். 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.