வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளை கண்காணிக்கும் போலீசாருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு கவச உடைகள் வழங்கி எஸ்பி பிரவேஷ்குமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவையொட்டி பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்கும் பணியில் எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் என மொத்தம் 52 சோதனைச்சாவடிகள் அமைத்து 3 ஷிப்ட்கள் அடிப்படையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட வேலூர் சைதாப்பேட்டை, கொணவட்டம், ஆர்.என்.பாளையம், கஸ்பா, உள்ளிட்ட பகுதிகள் ஹாட் ஸ்பாட்டாக அறிவித்து போலீசார் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 300 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் விதமாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநில எல்லைகளான சேர்க்காடு, கிறிஸ்டியான்பேட்டை, மாதண்டகுப்பம், பத்தலப்பள்ளி, பரதராமி, சைனகுண்டா உள்ளிட்ட 6 இடங்களில் 52 போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்கும் விதமாக போலீசாருக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கவச உடைகள் வழங்க எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 300 போலீசாருக்கு உடல் முழுவதும் அணியும் வகையிலான கவச உடை, முககவசம், காலனி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்டலென்ட் அரசு மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் இயங்கி வரும் தனிமைபடுத்தப்பட்ட வார்டுகளில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கும், நகரில் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள போலீசார் என மொத்தம் 300 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்றனர்.