டெல்லி: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 365-லிருந்து 411-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை, பலி எண்ணிக்கை 15-ஆக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார். தமிழகத்திற்கு கூடுதல் ரேபிட் கிட் வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். கூடுதல் ரேபிட் கிட் தருவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.