சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சார்ந்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதும், எந்தவித அறிகுறியும் இல்லாமல் திடீரென கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் இருப்பதும் மிகுந்த கவலை அளிக்கிறது.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கிற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறமோ அதற்கு இணையாக, பரிசோதனைகளின் அளவை அதிகப்படுத்துவதும் முக்கியமானதாகும். எனவே, தமிழகத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.