சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடி நேற்று (27ம் தேதி) காலை 10 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகள் குறித்தும், இதுதொடர்பாக பல்வேறு துறைகள் மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டார். அதற்கு முதல்வர், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பாக மாநில அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும் பிரதமர், மக்கள் நலன் கருதி, 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதை உறுதிசெய்ய வேண்டுமென்றும் மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த முதல்வர், மேற்கூறிய அனைத்தும் தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.