×

குடும்ப அட்டைகளுக்கு ரூ.1,000 நிவாரணம் அறிவிப்பு ரேஷன் கடை ஊழியர்கள் அச்சம்: வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டுகோள்

பள்ளிபாளையம்: குடும்ப  அட்டைகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால், பீதியடைந்துள்ள ரேஷன் ஊழியர்கள், அரசே நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில்  செலுத்த  கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 37,500  கூட்டுறவு ரேஷன் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்  மூலம் 1100 கடைகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், தற்போது கொரோனா  நிவாரண தொகையாக, பொதுமக்களுக்கு ரூ.1000 வீதம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தமிழக அரசு  அறிவித்துள்ளது. அரசின் அறிவிப்பு வெளியானதும், ஏராளமானோர் ரேஷன் கடைகளுக்கு இப்போதே  படையெடுத்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாய்  வழங்கும் போது அளவுக்கு அதிகமாக கூட்டம் சேர்வதுடன், தள்ளுமுள்ளு ஏற்படும். இதனால் தொற்று நோய், பொதுமக்களுக்கு மட்டுமின்றி ஊழியர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க, பயனாளிகளின் வங்கி கணக்கிலேயே நேரடியாக ஆயிரம் ரூபாயை செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர். மேலும், ரேஷன்  பொருட்களை வழங்கும் முன்பு, முன்கூட்டியே செல்போன் மூலம் எஸ்எம்எஸ், அறிவிப்பு போன்றவற்றின் மூலம்  கூட்டம் சேராத வகையில் வழங்கி, விற்பனையாளர்களின் பாதுகாப்பை அரசு  உறுதி செய்ய கோரிக்கை  வைத்துள்ளனர்.

Tags : Ration shop staff , Rs. 1,000 relief,family cards ,Ration shop staff fears:,pay directly , bank account
× RELATED ரேஷன் கடை ஊழியர்களுக்கு போதுமான...