சென்னை: சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா பரவலை தடுக்க மார்ச் 22ம் தேதி மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதை வணிகர்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, மார்ச் 22 ம் தேதி ஞாயிறு அன்று ஒரு நாள் பிரதமரின் ஒத்திகை ஊரடங்கை வெற்றிகரமாக நடத்தி இச்சுகாதார பேரிடர் காலத்தில் மக்கள் பணியை தொய்வின்றி தொடர்ந்திடுவோம் என உறுதி ஏற்கிறோம்.
வணிகர் பேரமைப்பின் நீண்ட நெடிய தீர்க்கப்படாமல் இருக்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு, பொருளாதார இழப்பு பணியாளர்களின் சுமை, ஜி.எஸ்.டி. வரிச்சுமை, வங்கி கடன் இ.எம்.ஐ. சுமை, வங்கி காசோலை நிலுவை, சொத்துவரி, தண்ணீர் வரி, மின் கட்டணங்ககள் செலுத்திட கால அவகாசம் அளித்து, கொரோனா வைரஸ் தொற்றிற்கு கேரள அரசு வழங்கி வரும் அவசர கால உதவிகளை தமிழக அரசும் வணிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி நடவடிக்கைகளை துரிதப்படுத்திடுமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.