×

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வு: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்மனு

சென்னை: தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு  கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு  என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்கக் கோரி மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.  இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய  அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் மீன்வளத்துறை இயக்குநர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குனர் சமீரன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்திய மீனவர்கள் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்ற நிலைப்பாட்டில்  தமிழக அரசு திட்டவட்டமாக இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த மார்ச் 10ம் தேதி நிலவரப்படி 3 தமிழக மீனவர்கள் மட்டுமே இலங்கை சிறையில் உள்ளனர். இலங்கையில் 2009ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு கைது நடவடிக்கைகள் குறைந்துள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு  250 வழங்கப்படுகிறது. 1,750 மீனவ குடும்பங்களுக்கு ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய்  உதவிதொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல்  மீன் பிடி திட்டத்தை அமல்படுத்த ரூ.286 கோடியை மத்திய, மாநில அரசுகள் விடுவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்  750 படகுகள் கட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.  மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு  மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.அப்போது மத்திய அரசு சார்பில் வக்கீல் மதனகோபால் ராவ் ஒரு கடிதத்தை தாக்கல் செய்தார். அந்த கடிதத்தில் தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூ.300 கோடி வழங்கியுள்ளது.  தமிழக அரசு மீனவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இந்த தொகையில் ரூ.286 கோடியை விடுவித்துள்ளது.  377 பேருக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இலங்கை கடற்படையினரால் படகுகளை இழந்த 96 பேரும் அடங்குவர்.

மொத்தமுள்ள ரூ.300 கோடியில் ராமநாதபுரம் மாவட்டம் குந்தக்கல்லில் மீன் இறங்கு மையத்தை அமைக்க ரூ.18.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.  இந்த அறிக்கைகளை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அறிக்கையை ஆய்வு செய்து மனுதாரர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.   மேலும் இந்த திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : fishermen ,Tamil Nadu ,Kachchativu ,Government , Tamil Nadu Fishermen, Kachchativu, Icort, Tamil Nadu Government
× RELATED இலங்கை சிறையிலிருந்து...