×

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 19 பேர் சென்னை வந்தனர்: அரசு சார்பில் வரவேற்பு

சென்னை: தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர், புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி இரண்டு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை ரோந்து கப்பல் வந்து, தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் மடக்கிப் பிடித்தனர்.

மேலும் எல்லை தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி, படகுகள், பிடித்து வைத்திருந்த மீன்கள், மீன்பிடி வலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன் பின்பு 19 மீனவர்களையும் இலங்கைக்கு கொண்டு சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சில நாட்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம் 19 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து, அவர்களை இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்திய தூதரக அதிகாரிகள், தமிழக மீனவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தி, மீனவர்களை விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.

மேலும் மீனவர்களுக்கு பாஸ்போர்ட்கள் இல்லாததால், அனைவருக்கும் தூதரக அதிகாரிகள் அவசரகால பயண சான்றிதழ்கள் வழங்கி, இலங்கையில் இருந்து சென்னை வருவதற்கான விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 19 தமிழக மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதோடு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில், மீனவர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

The post இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 19 பேர் சென்னை வந்தனர்: அரசு சார்பில் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mayiladuthurai ,Tamil Nadu ,Pudukottai ,Karaikal ,Puducherry ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...