சென்னை :முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது தன்னை விடுவிக்க கோரி நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அமைச்சரவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்த நிலையில், ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தான் தற்போது சட்டவிரோத காவலில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், ஆகையால் தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 20ம் தேதி நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. நளினி தொடர்ந்த மனுவை, நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.