×

சூடு பிடிக்கும் வெயில் திருவள்ளூரில் கூழ் விற்பனை ஜோர்

திருவள்ளூர்: பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில்தான் வெயில் மிக அதிகமாக இருக்கும். அந்த காலத்தில்தான் அக்கினி நட்சத்திரமும் வரும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தட்பவெப்பநிலை மாற்றத்தால் எல்லாம் தலைகீழாகி கொண்டிருக்கிறது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் மழை பெய்வதில்லை. குளிர்காலத்தில் வெயில் அதிகமாகவும், வெயில் காலத்தில் குளிராகவும் தட்வெப்பநிலை மாறியுள்ளது. ஏதாவது புயல் சின்னம் உருவானால்தான் மழை பெய்யும் என்கிற நிலையில் பருவமழையும் பொய்த்து விட்டன.

இது ஒருபுறம் இருக்க, எந்த ஆண்டும் இல்லாத வகையில் தற்போது முன் கூட்டியே மார்ச் முதல் வாரத்திலேயே வெயில் காலம் துவங்கி விட்டது என்று சொல்லும் அளவிற்கு திருவள்ளூரில் வெயில் அனலாக வாட்டி வதைக்க துவங்கியுள்ளது. காலை 9 மணிக்கே வெயில் மண்டையை பிய்க்க ஆரம்பித்து வீடுகிறது. மாலை 4 மணியை கடந்தும் விடுவதாக இல்லை. இன்னும் அக்கினி நட்சத்திர வெயில் வருவதற்கு பல நாட்கள் இருந்து கொண்டிருக்கிற நிலையில் அட்வான்சாக அக்கினி வெயிலை விட அதிகமான வெயில் இப்போது திருவள்ளூரில் அடித்து வருவது மக்களை கடும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதால் குடிநீர் தேவையும் அதிகரித்து விட்டன.

வெயிலுக்கு இயற்கையான பானங்களாக கருதப்படும் கம்மங்கூழ், கேப்பை கூழ், கரும்பு ஜூஸ், பழ ஜூஸ், நீர் மோர், இளநீர், தர்பூசணி போன்றவையும் தற்போது வழக்கமான விற்பனையை விட மிகவும் அதிகரித்திருப்பதாக இதன் வியாபாரிகள் தெரிவித்தனர். திருவள்ளூர் நகரில் ஆங்காங்கே சாலையோரம் அனைத்து ஊறுகாய் வகைகளுடன், கருவாடு ஆகியவற்றுடன், கூழ் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. நீண்ட தூரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், இது போன்ற கடைகளில் நின்று கூழ் குடித்து உடலை குளிர்ச்சியாக்கி கொள்கின்றனர். இப்போதே அடிக்கிற வெயில் பயமுறுத்தி கொண்டிருக்கிறது.


Tags : Veil, Thiruvallur, pulp sales
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...