திருமலை: நடுரோட்டில் மது குடித்துவிட்டு ஏஎஸ்ஐ உள்பட 6 போலீசார் பாம்பு நடனம், குத்தாட்டம் ஆடிய அவலம் அரங்கேறியுள்ளது. அவர்கள் 6பேர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மக்களை காக்கும் பெரும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. மேலும் அவர்கள் பொதுமக்களின் நண்பன் என்ற வகையிலான செயல்களும் நடைபெற்று வருகிறது. ஆனால் இதில் ஒருசில போலீசாரின் செயலால் ஒட்டுமொத்த போலீஸ் துறையையே கேலிக்கூத்தாக்கி விடுகிறது. புல் போதையில் போலீசார் போட்ட ஆட்டம் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதுபற்றிய விவரம்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள கொத்தூரு காவல் நிலையத்தில் ஏஎஸ்ஐயாக பணியாற்றி வருபவர் பாலசாமி.
இதே காவல் நிலையத்தில் தலைமை காவலர்களாக அசோக், அமர்நாத், சந்திரமோகன், வெங்கடேஷ் கவுட், ஊர்க்காவல் படை வீரர் ராமகிருஷ்ணா ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் 6 பேரும் போலீஸ் வாகனத்தில் ஒரு பகுதிக்கு சென்றனர். அங்கு தாங்கள் வாங்கிச்சென்ற மதுபானங்களை நடுரோட்டிலேயே உட்கார்ந்தபடியும் நின்றபடியும் குடித்துள்ளனர். அதிகளவு மது குடித்ததால் போதை தலைக்கேறியது. கட்டுப்பாட்டை இழந்த அவர்கள் குத்தாட்டம், பாம்பு டான்ஸ் ஆடினர். ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடியும் ஆட்டம் போட்டனர். போலீஸ் என்பதையே மறந்து போதையில் இவர்கள் போட்ட ஆட்டம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த அவலங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பொது இடத்தில் மது குடிக்க தடை இருக்கும்போது அந்த தடையை காக்க வேண்டியவர்களே மீறி ஆட்டம் போட்டது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதை பார்த்த காவல்துறை உயர் அதிகாரிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் காவல் நிலைய பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சைபராபாத் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சஜ்ஜனார் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.