சின்னாளபட்டி: சின்னாளபட்டி அருகே கோயில் கும்பிடு விழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே உள்ள ஜெ.ஊத்துப்பட்டியில் ஸ்ரீமாலம்மாள், ஸ்ரீசென்னப்பன், ஸ்ரீகருப்பணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் கும்பிடு விழா நடந்தது. இதையொட்டி அன்று மாலை 6 மணியளவில் ஸ்ரீமாலம்மாள் கோயிலில் பொங்கல் வைக்கப்பட்டது. பிடிமண் எடுத்து அம்மன் சக்கரம் வரைந்து கரகத்தை அலங்கரித்த பின்னர், பக்தர்கள் தரையில் வரிசையாக அமர்ந்து அம்மனை வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து பூசாரி மாலன் கம்பளியில் தேங்காயை வைத்து வழிபாடு செய்தார்.
பின்னர் பக்தர்கள் தலையில் பூசாரி தேங்காய்களை உடைத்தார். விழா ஏற்பாடுகளை ஊர்கவுன்டர் பழனிச்சாமி, பூசாரி மாலையன், வெள்ளைவரிசு முருகன், குருக்கள் மணி, கோல்காரர் லகுமையா, ஆபரண பெட்டிக்காரர் ராஜ், கிண்டி ராமசாமி தலைமையிலான அருது குல - ஆரிய குல வம்சத்தை சேர்ந்த விழா கமிட்டியார்கள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர்.