×

டிஎன்பிஎஸ்சியில் மோசடியை தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடு : தேர்வர்கள் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த முறைகேடுகளை அடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்விலும் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக தேர்வு எழுதிய பட்டதாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, 2013ம்  ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நலச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், மாநில தலைவர் வடிவேல்சுந்தர் ஆகியோர் கூறியதாவது: கடந்த 2012ம் ஆண்டு முதன்முதலாக தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. அதில் தாள் ஒன்று இடைநிலை ஆசிரியர்களுக்கும், தாள் இரண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த தேர்வில் பங்கேற்க தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். ஆனால் அவர்களில் வெறும் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். எனவே, தேர்வில் மதிப்பெண் தளர்வு வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதனால் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. இரண்டாம் தேர்வில் 19 ஆயிரத்து 261 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் அவர்களின் மதிப்பெண்கள் குறித்த விவரங்களை இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை. இதற்கு முன்னதாக நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 2448 பேரின் தேர்ச்சி பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டது. அதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது.

குறிப்பாக, முதற்கட்ட தேர்வின் போது காலையில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் வெறும் 10, 12 மதிப்பெண்கள் பெற்ற ஆசிரியர்கள், மதியம் நடந்த இரண்டாம் தாள் தேர்வில் மட்டும் 150க்கு 113 மதிப்பெண் பெற்றுள்ளனர். இது எப்படி நடந்தது.  காலை தேர்வில் 16 மதிப்பெண் பெற்ற ஒருவர் மதியம் நடந்த தேர்வில் 114 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்த இரண்டு நபர்கள் ஆசிரியர் தேர்வு எழுதியது ஒரே தேர்வு மையம், ஒரே தேர்வு அறை என்பதை மறுக்கமுடியாது. அதில் முதலிடம் பிடித்த தேர்வர் அந்த தேர்வு கடினமாக இருந்ததாக பேட்டி அளித்தார். ஆனால், அவர் 150க்கு 142 மதிப்பெண் பெற்றுள்ளார். அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளுக்கான விதிமுறைகளை மீறி ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 70 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றும் இதுவரை எங்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. ஆனால் முன்பு நடந்த தேர்வுகளில் முறைகேடாக செயல்பட்டு தகுதியற்ற நிலையில் உள்ளே நுழைந்து பணி நியமனம் பெற்று எங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளனர். இதுபோல ஊழல் செய்து உள்ளே நுழைந்தவர்களை அடையாளம் காட்டியும் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டில் நடந்த தேர்விலும் முறைகேடு  நடந்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் பதில் அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. தற்போது பல்வேறு தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதனால் நீதிமன்றம் தானாக முன்வந்து போட்டித் தேர்வு சார்ந்த அனைத்து முறைகேடுகளையும் விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரணையும் வேண்டும். அப்படி விசாரித்தால் எங்களிடம் உள்ள ஆதாரங்களை கொடுப்போம்.

Tags : examiners ,TNPSC , Teacher qualification ,scandal at TNPSC,examiners
× RELATED மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி...