சென்னை: மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 7வது நாட்களாக சென்னையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தன. இதன் காரணமாக நேற்று தலைமைச் செயலகம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை உட்பட சென்னை முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் தலைமை செயலகத்திற்கு வரும் ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவரையும் பலத்த சோதனைக்கு பின் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் தலைமை செயலகத்திற்கு உள்ளே அனுமதிக்கவில்லை. தலைமை செயலகம் சாலையில் எந்த ஒரு வாகனத்தையும் போலீசார் அனுமதிக்காமல் மாற்று பாதையில் திருப்பிவிட்டனர். மேலும் கோட்டை ரயில்நிலையம், தலைமை செயலகம் என சுற்றியுள்ள பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.