சென்னை: தமிழிசை கருவியான தவில் இசையில் வல்லுநராக விளங்கிய கலைமாமணி திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழிசை கருவியான தவில் இசையில் வல்லுநராக விளங்கிய கலைமாமணி திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி மறைவெய்திய செய்தி அறிந்து வேதனையடைகிறேன். இசைத்துறையில் தனக்கான தனி இடத்தை பெற்றவர் கலியமூர்த்தி. என் திருமண விழாவில் கோடையிடிபோல அவரது இசை முழங்கியது இன்னமும் செவிகளில் ஒலிக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, கலியமூர்த்தியின் இசைத்திறமையை பாராட்டும் வகையில் கலைமாமணி விருது அளித்து சிறப்பித்தார். திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அனைவருக்கும் ஆறுதலை உரித்தாக்குகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.