×

விதிமுறைகளை மதிக்காமல் நிறுத்தத்தில் நிற்க மறுக்கும் அரசு பஸ்கள்

பரமக்குடி: பரமக்குடி ஒட்டப்பாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிறுத்தாமல், மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை போலீசார் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி ஓட்டப்பலம் பகுதியில் உள்ள மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இளையான்குடி மற்றும் முதுகுளத்தூர் செல்லக் கூடிய பேருந்துகள் வளைவு பகுதியில் நின்று செல்வதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்துகள் எம்எல்ஏ அலுவலகம் முன்பும், மதுரையில் இருந்து வரும் பேருந்துகள் காளியம்மன் கோவில் அருகிலும் நிறுத்துவதற்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார், பேருந்துகள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல், பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு, பேரிகார்டு அமைத்து தனி வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அரசு பேருந்து மற்றும் மினி பேருந்து ஓட்டுனர்கள் தனி வழியை பயன்படுத்தாமல், மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மேலும் பேருந்து நின்று செல்லும் இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் பயணிகள் நிழற்குடை பகுதிக்கு வராமல் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக போக்குவரத்து புதிய விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள சாலைகளை பேருந்து ஓட்டுனர்கள் கடைபிடிக்காததால், தொடர்ந்து இப்பகுதியில் விபத்து நடந்து வருகிறது. போக்குவரத்து போலீசார் பேருந்துகள் நிற்கும் இடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதித்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், “போக்குவரத்து போலீசார் குறைவாக இருந்தாலும், பரமக்குடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பணியாற்றி வருகிறோம். பேருந்து மற்றும் மினி பேருந்து ஓட்டுநர்கள் போக்குவரத்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பரமக்குடி பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு 5 இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்றனர்.

Tags : roads , Without respecting the terms Government buses refusing to stand
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...