மதுரை: நெல்லை மாவட்டம், கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
பெரும் தொழிலதிபர்களும், பல்வேறு நிறுவனங்களும் வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளனர். கடந்த 2005 வரை சுமார் ரூ.3 லட்சம் கோடி, பெரும் நிறுவனங்களில் இருந்து வராக்கடனாக உள்ளதாக செய்திகள் வெளியாகின. அது தற்போது ரூ.16 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வராக்கடனை வசூலிக்க யாரும் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் ண ஏழை மக்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிப்பதில் வங்கிகள் கடும் நடவடிக்கையை கையாளுகின்றன. எனவே, கல்வி கடன்களை தள்ளுபடி செய்யவும், பெரும் நிறுவனங்கள் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் உள்ள வராக்கடன் விபரத்தை வெளியிடவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் நேற்று விசாரித்து, எந்தவித அடிப்படையும் இல்லாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு இந்த பணத்தை ஒரு வாரத்தில் செலுத்த உத்தரவிட்டனர்.