×

உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: தமிழக அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மாநகராட்சி, நகராட்சிக்கும் சேர்த்து தேர்தலை நடத்தாமல் உத்தரவை மீறி செயல்பட்ட தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி உச்ச நீதிமன்றம் நேற்று  வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிக்கு தற்போது மொத்தம் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல்  நடத்துவது தொடர்பாக வார்டு மறுவரையறை பணிகள் நடந்து வருகிறது.  இந்நிலையில், வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 7ம் தேதி புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தலை பஞ்சாயத்து, மாநகராட்சி, மற்றும் நகராட்சி என அனைத்திற்கும் மொத்தமாகதான் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய முந்தைய உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தை பொறுத்தமட்டில் கிராமப்புற ஊரக தேர்தலை மட்டும் நடத்திவிட்டு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு நடத்தாமல் விட்டுவிட்டது. மேலும் அதுகுறித்த அறிவிப்பாணையை கூட  இன்னும் வெளியிடவில்லை. இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். அதனால் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்’’  என குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு  தற்போது தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவைகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் மற்றும் அரசும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு  என்பது எதுவும் கிடையாது. அதற்கான முகாந்திரமும் மனுவில் கிடையாது’’ என தெரிவித்த தலைமை நீதிபதி, அதுதொடர்பான மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.   


Tags : SC ,Tamil Nadu Case of Supreme Court ,Government , Local Elections, Government of Tamil Nadu, Court of contempt, Supreme Court
× RELATED பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த...