×

கர்நாடகாவில் அமைச்சர் பதவிகேட்டு எம்எல்ஏ.க்கள் மிரட்டல் துவக்கம் முதல்வர் எடியூரப்பாவுக்கு தலைவலி

பெங்களூரு: அமைச்சர் பதவி அளிக்கவில்லை என்றால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா  செய்யவும் தயாராக இருப்பதாக பாஜ மூத்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான உமேஷ்  கத்தி முதல்வர் எடியூரப்பாவுக்கு எச்சரிக்கை விடுத்தது பாஜவில் அதிர்வலைகளை  ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் பாஜ  சார்பில் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றபோது இவருடன் 17 பேர்  அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். பின்னர் இதே அமைச்சரவையில் கடந்த 6ம்  தேதி மேலும் 10 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இதன் இடையே  பாஜவை சேர்ந்த முன்னணி எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி அளிக்காதது  கட்சிக்குள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
பாஜ மூத்த எம்.எல்.ஏ.க்களில்  ஒருவரான உமேஷ் கத்தி நேற்று முதல்வர் எடியூரப்பாவை, பெங்களூரு டாலர்ஸ்  காலனியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

அப்போது அவர், ‘‘எனது பெயருக்கு களங்கம் ஏற்பட நேர்ந்தால் ஒரு நிமிடமும் தாமதிக்காமல் கட்சியிலிருந்து விலகுவது மட்டுமின்றி  எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துவிடுவேன். எட்டு முறை எம்.எல்.ஏ.வாக  தேர்வு செய்யப்பட்டுள்ளேன். செல்லும் இடமெல்லாம் உமேஷ் கத்திக்கு அமைச்சர்  பதவி அளிக்கப்படும் என கூறிவந்தீர்கள். அப்படியிருக்க எந்த காரணத்திற்காக  அமைச்சர் பதவி அளிக்காமல் என்னை புறக்கணித்தீர்கள்?’’ என்று கேட்டுள்ளார்.  
இதற்கு பதில் அளித்த முதல்வர், ‘‘நான் உங்களை (உமேஷ் கத்தியை)  அமைச்சரவையில்  சேர்க்க தயாராக இருந்தேன். ஆனால், சி.பி.யோகேஷ்வரை அமைச்சராக்க  வேண்டும் என்ற காரணத்திற்காக உங்களுக்கும், அரவிந்த் லிம்பாவளிக்கும்  அமைச்சர்  பதவி அளிக்காமல் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மேலும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் எப்படியாவது உங்களை அமைச்சரவையில்  சேர்த்துக்கொள்கிறேன்’’ என  உமேஷ் கத்தியிடம் கூறியுள்ளார் என தெரிகிறது.  அமைச்சர் பதவி வழங்காவிட்டால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் எனக்கூறிய உமேஷ் கத்தி எடியூரப்பா வீட்டில்  இருந்து ெவளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த எடியூரப்பா, உமேஷ்  கத்தியை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும்படி துணை முதல்வர் லட்சுமண் சவதிக்கு  உத்தரவிட்டுள்ளார். முன்பு குமாரசாமி ஆட்சியிலும் எம்எல்ஏ.க்கள் மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவரது ஆட்சியே கவிழ்ந்தது.

Tags : Inauguration ,Karnataka MLAs ,Karnataka , Karnataka, MLAs intimidate, Chief Minister Yeddyurappa
× RELATED மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ பிரிவு தொடக்க விழா