சென்னை: தொழில் நுட்ப படிப்புகளை நடத்தும் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற இன்று தொடங்கி 29ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகள் என சுமார் 500 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இது தவிர இதர தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இவை அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின்(ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்றிருந்தால் தான் பட்டப் படிப்புகளை வழங்க முடியும். ஏற்கெனவே அங்கீகாரம் பெற்றுள்ள கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் புதியதாக தொடங்கப்படும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் புதியதாக விண்ணப்பித்து அங்கீகாரம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து, 2020-2021ம் கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி மேற்கண்ட கல்வி ஆண்டில் தொழில் நுட்பப் படிப்புகள் நடத்துவதற்கு தற்போதுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் புதியதாக தொடங்க உள்ள தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை 6ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போதுள்ள கல்வி நிறுவனங்களுக்கு தன் விவரப் பட்டியல்(self-disclosure) அடிப்படையில் அங்கீகாரம் நீட்டிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அபராதத்துடன் மார்ச் 5 வரை விண்ணப்பிக்கலாம்.