அண்ணாநகர்: அரும்பாக்கத்தில் லாரி மோதி விமான நிலைய பெண் காவலரின் கணவர் பலியானார். அசோக்நகர் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் பெண் காவலர் சங்கீதா. இவர், வடபழனி காவல் நிலையத்தில் நீதிமன்ற அலுவல் பார்த்து வருகிறார். இவரது கணவர் ஸ்டீபன் (45). இவர், சென்னை விமான நிலையத்தில் கான்ட்ராக்ட் வேலைகள் செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம் 100 அடி சாலை சிக்னல் அருகே ஸ்டீபன் பைக்கில் சென்றார். அப்போது அவ்வழியே காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி ஸ்டீபனின் பைக் மீது வேகமாக மோதியது. இதில் ஸ்டீபன் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஸ்டீபனின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஜெயப்பிரகாஷ் (35) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.