சென்னை: காவலர் குடியிருப்புகள் வேண்டி விண்ணப்பிக்கும் இணையதளம் இன்று முதல் துவக்கப்படும் என்று காவல்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு படி, காவலர் குடியிருப்புகள் வேண்டி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் இணையவழி மூலம் சமர்பிக்க www.policequarters.org என்ற வலைதளம் இன்று முதல் துவக்கப்படுகிறது. இதன்படி அனைத்து காவல்துறை அதிகாரி, பணியாளர்களுக்கும் இணையவழி மூலம் குடியிருப்புகள் விண்ணப்பிக்கவும் ஒதுக்கீடு செய்யவும் முடியும்.
அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் காலியாக உள்ள குடியிருப்புகளின் விவரங்களை இணையம் மூலம் அறியலாம். அனைத்து காவல் அதிகாரிகள், காவலர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழி மூலம் சமர்பிக்க முடியும். பதிவு செய்தவுடன் காத்திருப்பு பட்டியல் வரிசை எண் தனிநபரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இது ஒதுக்கீட்டின் வெளிப்படை தன்மைமையயும் மற்றும் காத்திருப்பு பட்டியலின் மூப்பு தன்மையையும் உறுதி செய்யும். மேலும் இணையவழி மூலம் காவலர் குடியிருப்புகளுக்காக விண்ணப்பிக்கும் போது தனிநபர் விருப்பத்தின் படி குடியிருப்பை தேர்ந்தெடுப்பது சாத்தியமாகும். இவ்வாறு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.