×

கோயில்களில் ஸ்தபதி, பொறியாளர் பணியிடங்களுக்கு சிற்பக்கலை கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயில்களில் ஸ்தபதி மற்றும் பொறியாளர் பணியிடங்களுக்கு அரசு சிற்பகலை கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு தமிழக இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் புராதன சிற்பகலை உள்ளிட்ட கலைகளை பாதுகாக்க, கடந்த 1957ம் ஆண்டு மாமல்லபுரத்தில் அரசு சிற்பக்கலை கல்லூரி துவங்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழக இணைப்பு பெற்ற கல்லூரியில், கோயில் கட்டிடக் கலை, ஆகம சாஸ்திரம் உள்பட 58 பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த கல்லூரியில், பாரம்பரிய கட்டிடக் கலை படிப்பில் பி.டெக் பட்டம், கவின் கலை பட்டங்கள் படித்து, ஆண்டுதோறும் 40 மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இதுவரை 1800 மாணவர்கள் கல்லூரியில் படித்து முடித்துள்ளனர். இந்த கல்லூரியில் படித்தவர்களை, இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 38 ஆயிரத்து 600 கோயில்களில், பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் ஸ்தபதிகளாகவும், உதவிப் பொறியாளர்களாகவும் நியமிக்கும்படி, இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிடக் கோரி, கல்லூரியில் பட்டம் பெற்ற முருகன்என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். அவர் அளித்த உத்தரவு வருமாறு: வழக்கு விசாரணையின் போது, இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், மாமல்லபுரம் சிற்பகலை கல்லூரியின் முதல்வர் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று ஸ்தபதி, பொறியாளர் உள்ளிட்ட பதவிகளை உருவாக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், இதற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை சார்பு பணிகள் விதிகளை  வகுக்க இருப்பதாகவும், கோயில்களை புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்பிற்காக தனி பிரிவை துவக்கி, 2019ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை சார்பு பணிகள் விதிகளை 3 மாதங்களுக்குள் இந்து சமய அறநிலையத்துறை இறுதி செய்ய வேண்டும். கோயில்களில் காலியாக உள்ள ஸ்தபதி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட உள்ள இந்து அறநிலைய துறையின் புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்பு துறையில் ஸ்தபதி, பொறியாளர் பதவிக்கு சிற்பகலை கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லூரிக்கு தேவையான வசதிகளை இந்து சமய அறநிலையத்துறை செய்து கொடுக்க வேண்டும். கோயில்களில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழமையான சிற்பங்கள், ஓவியங்கள், சிலைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

Tags : Templars ,Tamil Nadu ,engineer ,High Court ,government ,Priority: High Court ,college students , Temple, Establishment, Engineer, Sculpture, College, Student, Priority, Government of Tamil Nadu, High Court
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...