சென்னை: உள்ளாட்சி தேர்தல் செலவு கணக்கு நகலை 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
தேர்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கினை முறைப்படி உரிய படிவத்தில் வேட்பாளர்கள் பராமரிக்க வேண்டும். இதன் நகலை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் மாவட்ட ஊராட்சி செயலரிடமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தேர்தல் செலவு கணக்கு விவரத்தினை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான ஒப்புதலை தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வருங்காலங்களில் உள்ளாட்சி தேர்தல்களில் மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவர்களாவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.