சென்னை: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அரசு அதிகாரிகள் முறைகேடாக பொய் வழக்கு பதிவு செய்வதை தடுக்க வேண்டும் என்று, முதல்வரிடம் மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனி பிரிவில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் ஆற்று மணல் கிடைக்காத நிலையில் எம்-சாண்ட் ஏற்றிதான் லாரி தொழிலை நடத்தி கொண்டிருக்கிறோம். சில அரசு அதிகாரிகள் முறையற்ற நடவடிக்கைகள் மூலம் பெரும் இன்னலை தினசரி சந்தித்து வருகிறோம்.
முறைகேடாக மணலை ஏற்றி வரும் லாரிகளை காவல் துறையிடம் ஒப்படைக்காமல், நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் ஆணை பிறப்பித்த பின்பும் பொன்னேரி வருவாய் துறை உயர் அதிகாரி உரிய ரசீது இருந்தும், முறைகேடாக பொய்யான தகவல்களுடன் லாரிகள் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்தில் லாரிகளை ஒப்படைத்துள்ளார். இதுபோன்ற பொய் வழக்கு பதிவு செய்வது பல மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விசாரணை செய்து தவறான நடவடிக்கை எடுத்த பொன்னேரி வருவாய் துறை அலுவலகத்தின் உயர் அதிகாரி மீதும், திருட்டு மணல்தான் என உறுதி செய்யாமல் வழக்கு பதிவு செய்த செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.