பெருந்துறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை, சரளை புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அ.தி.மு.க. முன்னாள் மாணவர் அணி செயலாளர். பெருந்துறை ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டு, தனது மனைவி சண்முகப்பிரியா ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட அதிமுகவில் சீட் கேட்டார். ஆனால், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த ஜெயக்குமார் 10-வது ஒன்றியக்குழு வார்டிலும், இவரது மனைவி சண்முகப்பிரியா 12-வது ஒன்றிய குழு வார்டிலும் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இது மட்டுமல்லாமல், மேலும் 9 வார்டுகளில் அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமாரின் ஆதரவாளர்களை சுயேட்சையாக தென்னைமர சின்னத்தில் போட்டியிட வைத்துள்ளார். விஜயமங்கலம் டோல்கேட், பொன்முடி, சரளை ஆகிய பகுதிகளில் ஜெயக்குமார் ரிசார்ட் நடத்தி வருகிறார்.
இவரது ரிசார்டில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக மாவட்ட தேர்தல் பார்வையாளர் விவேகானந்தனுக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின்பேரில், பறக்கும் படை தாசில்தார் செந்தில்ராஜ் தலைமையில் 10 போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ரிசார்ட்டில் சோதனை நடத்தினர். அங்கு மேற்கொண்ட சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இருந்தபோதிலும் அறையில் தங்கியிருந்த ஒருவர் அனுமதி இல்லாமல் மது அருந்தியதாக ரிசார்ட் மேலாளர் வேலுச்சாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விட்டு திரும்பினர். இதுகுறித்து ஜெயக்குமார் கூறுகையில், ‘‘அதிமுகவுக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுவதால் என் மீது பொய் வழக்கு போட பெருந்துறை போலீசார் முயற்சி செய்கின்றனர். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசாருக்கு எதிராக நான் வழக்கு தொடர உள்ளேன்’’ என்றார்.