×

பராமரிப்பின்றி பாழான நாசரேத்-குரும்பூர் சாலை: பொதுமக்கள் அவதி

நாசரேத்: தூத்துக்குடி மாவட்டத்தில் பராமரிப்பின்றி பாழான நாசரேத்- குரும்பூர் சாலையால் அவதிப்படும் பொதுமக்கள், விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத்- குரும்பூர் இடையேயான சாலை பராமரிப்பின்றி சேதமடைந்து வந்தது. குறிப்பாக நாசரேத் ரயில் நிலையம், கே.வி.கே சாமி சிலை, பிரகாசபுரம், மூக்குப்பீறி, இடையன்விளை, நெய்விளை, புன்னைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இச்சாலையானது தொடர்ந்து பெய்த மழையினால் மேலும் மோசமானது. தற்போது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறிவிட்டது.

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பல்வேறு பணிநிமித்தம் இச்சாலை வழியாக பல்வேறு வாகனங்களில் செல்லும் பல்வேறு தரப்பினரும் அவதிப்படுகின்றனர். மேலும் இதன் வழியாக புன்னைநகர் வனத்திருப்பதி கோயிலில் நடைபெறும் விழாக்களுக்கும், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டங்களுக்கும் சிறப்பு பஸ்கள் மற்றும் வாகனங்களில் வந்துசெல்வோர் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து நாசரேத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘ பராமரிப்பின்றி உருக்குலைந்த இச்சாலையில் அவ்வப்போது சிறு விபத்து நடப்பது தொடர்கிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் இச்சாலை வழியாக பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பயணிக்கும்போது படாதபாடு படுகின்றனர்’’ என்றார். எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி உடனடியாக சாலையை சீரமைக்க முன்வருவார்களா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags : Nazareth-Kurumbur Road: Public Avadi , Nazareth-Kurumbur Road, Public Avadi
× RELATED உடலில் கடப்பா கல் கட்டப்பட்டுள்ளது...