புதுடெல்லி: சுவீடன் மன்னர் கார்ல் 16 கஸ்டப் மற்றும் ராணி சில்வியா ஆகியோர் 5 நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தனர். டெல்லி வந்தடைந்த அவர்களுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னர் கார்ல் 16 கஸ்டப், ராணி சில்வியா ஆகியோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கின்றனர். இந்த 5 நாள் பயணத்தின்போது டெல்லி மட்டுமல்லாமல் மும்பை மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களை சுவீடன் மன்னரும், ராணியும் பார்வையிடுகின்றனர். மூன்றாவது முறையாக மன்னர் கார்ல் இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.