×

பெண் எஸ்.பியின் நாற்காலி ஆசையை நிறைவேற்றிய காக்கிகள்

வடமாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு 2 ஆண்டுக்கு முன் எஸ்பியாக பணிக்கு வந்த அந்த பெண் அதிகாரி சட்டம்- ஒழுங்கு, டிராபிக் பிரிவுகளில் அதிரடி காட்டினார். மேல் அதிகாரியான மற்றொரு பெண்ணுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஏனாமிற்கு தூக்கி அடிக்கப்பட்டார். அவர் கவர்னரின் ஏனாம் விசிட்டின்போது நடந்த அமைச்சர் தரப்பின் கருப்புக்கொடி போராட்டத்தில் பாதுகாப்பு பணிகளை திறம்பட மேற்கொண்டார். அந்த பெண் எஸ்பியுடன் மோதல் போக்கை கையாண்ட சீனியர், வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கு புதுச்சேரி ஆசை வரவே தனது செல்வாக்கை பயன்படுத்தினார். இதன் காரணமாக சமீபத்தில் காவல்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் நடந்த இடமாற்றல் உத்தரவில் ஏனாமில் இருந்த அந்த பெண் அதிகாரிக்கு வாகன போக்குவரத்தும் கூடுதலாக போக்குவரத்து தலைமை அலுவலகமும் ஒதுக்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியை ஏனாம் போலீஸ் ஸ்டேஷனில் காவலர்களுடன் இணைந்து கொண்டாடிய அந்த பெண் எஸ்பியை, வழியனுப்பு விழாவின்போது, நாற்காலியில் அமர வைத்து வாசலில் நிறுத்தியிருந்த அவரின் வாகனம் வரை தூக்கிச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். தனது நாற்காலி ஆசையை நிறைவேற்றிய காவலர்களுக்கு நன்றி தெரிவித்த அந்த பெண் எஸ்பி புதுச்சேரி நோக்கி கிளம்பியுள்ளார்.

துட்டு வெட்டு...இல்லேன்னா போட்டுருவேன் எப்.ஐ.ஆரு!

கோவை புறநகர் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் காவல் அதிகாரி பணியில் இருக்கிறார். இவர், வசூலில் பலே கில்லாடி. இக்காவல்நிலையத்துக்கு ஏதாச்சும் புகார் மனு வந்தால், அதை முறையாக விசாரித்து, நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, எதிர்தரப்பை நேரில் வரவழைத்து, தனியாக பேசுகிறார். ‘’விவகாரம் முத்திப்போச்சு... ஏதாச்சும் கவனிச்சா எப்.ஐ.ஆர். போட மாட்டேன்.. இல்ல, எப்ஐஆர் போட்டு உள்ளே தள்ளிடுவேன்... எப்படி வசதி..?’’ என வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்து, துட்டு கறந்து விடுகிறார். புகார் மனுவில் உண்மைத்தன்மை உள்ளதா?, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கிறதா? என இந்த அதிகாரி பார்ப்பதில்லை. தனது பாக்கெட் நிறையுதா? என்று மட்டுமே பார்க்கிறார். ‘’புள்ளைங்க படிப்பு செலவு, வீட்டு கடன் இ.எம்.ஐ. கார் கடன் தவணை என எக்கச்சக்கமா செலவு இருக்கு, சீக்கிரமாக கொடுத்துட்டு போங்கப்பா...’’ என எதிர்தரப்பை நன்றாக கறந்துவிட்டு அனுப்புகிறார். புகார் மனு கொடுப்பவர், நொந்து நூலாகி விடுகிறார். இந்த அதிகாரியின் தனித்திறமையை பார்த்து, மற்ற அதிகாரிகள் மூக்கு மேல விரலை போட்டு ஆச்சரியப்படுறாங்களாம்.

ஆண் இன்ஸ். வேஸ்ட், பெண் இன்ஸ். பெஸ்ட்

குமரி மாவட்ட எல்லையோர காவல் நிலையத்தில் அடுத்தடுத்து இரு பெண் இன்ஸ்பெக்டர்கள் பணியில் இருந்தனர். இவர்கள் பணியில் இருந்த காலத்தில் அந்த காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக இருந்தவரும், எஸ்.பி. ஏட்டும் சேர்ந்து போட்ட ஆட்டம் உச்ச கட்டத்தில் இருந்தது. இவர்கள் நினைத்தால் தான் கேஸ். இல்லையென்றால் காசு என்ற ரீதியில் கொடி கட்டி பறந்தனர். ஸ்டேஷனில் நடப்பதை யாராவது வெளியில் சொல்லி விட்டால் அவர்களை உண்டு இல்லை என்று ஒருகை பார்த்து விடுவார்களாம். பிறகு மாட்டி விடக் கூடாது என்பதற்காக அந்த எஸ்.பி. ஏட்டு, உடனடியாக எஸ்.பி. அலுவலகத்தை தொடர்பு கொண்டு என்னை பற்றி இப்படியொரு தகவல் வரும். நீங்கள் நம்பி வீடாதீர்கள். அது பொய்யான தகவல் என கூறி விடுவாராம். இதனால் அந்த எஸ்.பி. ஏட்டு பற்றி சொல்லக்கூடிய புகார், எஸ்.பி.யின் காதுகளை எட்டுவதில்லையாம்.

இப்படி தனி ராஜாங்கம் நடத்தி வந்த அந்த எஸ்.ஐ.யும், எஸ்.பி. ஏட்டும் இப்போது ஆண் இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்ததால் எதுவும் செய்ய முடியாமல் திணறுகிறார்களாம். எப்படிடா, இவரை இங்கிருந்து கழற்றி விடலாம் என்று ரகசிய வேலை செய்வதுடன், இந்த இன்ஸ்பெக்டருடன் யார் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை பார்த்து அவர்கள் காதுபடவே ஆபாச வார்த்தைகளால் எஸ்.ஐ. திட்டுகிறாராம். எஸ்.பி. ஏட்டு உதவி இருப்பதால், எஸ்.ஐ.யை ஒன்றும் செய்ய முடியாத நிலை இருப்பதால், இன்ஸ்பெக்டரும் செய்வதறியாமல் தவிப்பதாக காவல்துறை தகவல்கள் கூறுகின்றன.

Tags : SP ,
× RELATED ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை