திருச்சி: கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, அரியலூர்,புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் பலத்த மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் 12 செமீ, லால்பேட்டையில் 9 செமீ மழை பெய்துள்ளது. திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார இடைங்களில் பலத்த மழை பெய்தது. நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
கடலூர் மற்றும் அதனை சற்றியுள்ள இடங்களில் மிதமான மழை பெய்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பணார்கோவில் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய மழை பெய்தது. நாகை, வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை, நாகை, சிதம்பரம், திருவிடைமருதூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்தது. கும்பகோணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு தொடங்கி தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.