திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே அரசு பள்ளியில் சத்துணவு கூடம் இல்லாததால் மதிய உணவை எதிர்பார்த்து பசியுடன் மாணவர்கள் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது வடபழஞ்சி கிராமம். இந்த கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. 130க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வடபழஞ்சி கிராமத்தில் இருந்து கரடிபட்டி செல்லும் சாலையில் உள்ளது. சத்துணவு கூடம் இல்லாததாலும், மேலும் சத்துணவு சமைக்க பணியாளர்கள் இல்லாததாலும் இங்கு மதிய உணவு சமைக்கப்படுவதில்லை. இதனால் இதே கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில், உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கும் சேர்த்து மதிய உணவு சமைக்கப்படுகிறது.
பின்னர் இந்த சத்துணவு ஆரம்ப பள்ளியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உயர்நிலை பள்ளிக்கு தினமும் ஆட்டோவில் எடுத்து வந்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆட்டோ வருகையை எதிர்பார்த்து மாணவர்கள் தட்டுடன் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் ஆட்டோ வர தாமதமானால் அன்றைய தினம் மாணவர்களுக்கு மதிய உணவும் தாமதமாக வழங்கப்படுகிறது. 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளிக்கு தனியாக சத்துணவு கூடம் மற்றும் மதிய உணவு சமைக்க பணியாளர்களை நியமிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.