சென்னை: வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதியில் லேசான மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது. சூறைக்காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் அடுத்த 24மணி நேரத்திற்கு குமரிக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செய்யூரில் 7 செ.மீ., ராமநாதபுரம், ராமேஸ்வரம், மண்டபத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.