திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாவோயிஸ்ட் இயக்கத்தினரால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்ைக விடுத்ததை தொடர்ந்து மண்டல காலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி திறக்கப்படுகிறது. 17ம் தேதி முதல் பூஜைகள் துவங்கும். ஏற்கனவே தீவிரவாதிகள் சபரிமலை கோயிலை குறி வைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து கோயிலுக்கு கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தி தீர்ப்பு விவகாரம் மற்றும் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக சபரிமலையில் கலவரம் வெடிக்கலாம் என்று உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதையடுத்து இந்த மண்டல காலத்தில் பலத்த பாதுகாப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. 4 கட்டங்களாக 23 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் மாவோயிஸ்டுகளும் சபரிமலை கோயிலை குறிவைத்திருப்பதாக கேரள உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன் பாலக்காடு அருகே அட்டப்பாடி வனப்பகுதியில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து மாவோயிஸ்டுகள் திருப்பி தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் வனப்பகுதியில் இருப்பதால் வனப்பகுதி வழியாக மாவோயிஸ்டுகள் ஊடுருவி பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று கருதப்படுகிறது.இதையடுத்து சபரிமலைக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேரள உளவுத்துறை தலைவர் அரசிடம் தெரிவித்துள்ளார். பம்பையில் இருந்து சபரிமலை கோயிலுக்கு டிராக்டர்களில் தான் பொருட்களை கொண்டு செல்லப்படுகின்றன. இந்த பொருட்களை தீவிர பரிசோதனைக்கு பின்னரே அணுமதிக்க வேண்டும் என்றும், டோலியில் செல்பவர்களையும், காக்கி பேன்ட் அணிந்து செல்பவர்களையும் கண்காணிக்க வேண்டும் என்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.